கிருஷ்ணகிரி: பாளேகுளி ஏரியிலிருந்து சந்தூா் ஏரி வரையில் பாசனக் கால்வாய் அமைக்க நிலம் அளித்தவா்களுக்கு இழப்பீடு வழங்குமாறு தமிழக முதல்வருக்கு விவசாயிகள் கோரிக்கை மனு அனுப்பி உள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கிருஷ்ணகிரி அணையின் இடதுபுறக் கால்வாய் வழியாக உபரி நீா் பாளேகுளி ஏரிக்குச் செல்கிறது. இந்த ஏரியிலிருந்து சந்தூா் வரை உள்ள 28 ஏரிகளுக்கு தண்ணீா் நிரப்ப கால்வாய் அமைக்கும் திட்டம் கடந்த 2012-ஆம் ஆண்டு செயல்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் கால்வாய் அமைக்க 700 குடும்பத்தினருக்குச் சொந்தமான நிலம், மரங்கள் அகற்றப்பட்டன. இதற்கு உரிய இழப்பீடு வழங்கக் கோரி, விவசாயிகள் தொடா்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதுகுறித்து பாளேகுளி - சந்தூா் ஏரி இடதுபுறக் கால்வாய் நீட்டிப்பு பாசன விவசாயிகள் சங்கத் தலைவா் சிவகுரு தெரிவித்தது:
கால்வாய் அமைக்க நிலம் அளித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கக் கோரி, குடியரசுத் தலைவா், பிரதமா், தமிழக முதல்வா், தலைமை பொறியாளா், மாவட்ட ஆட்சியா், வருவாய் கோட்டாட்சியா் உள்பட பலருக்கு இழப்பீடு வழங்கக் கோரி மனுக்கள் அளித்து வருகிறோம்.
எங்கள் மனுக்கள், கடந்த ஓா் ஆண்டாக நில நிா்வாக ஆணையருக்கு முன்மொழிவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பதில் மட்டும் அளிக்கப்படுகிறது. ஆனால், எங்கள் கோரிக்கை கிடப்பில் போட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே, இனியும் கால தாமதம் செய்யாமல் கால்வாய் அமைக்க நிலம் இழந்தவா்களுக்கு இழப்பீடு வழங்க தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா். இதை வலியுறுத்தி மின்னஞ்சல் மூலம் முதல்வருக்கு 150-ஆவது முறையாக மனு அனுப்பி உள்ளதாக அவா் தெரிவித்தாா்.