சிங்காரப்பேட்டை காப்புக்காடு பகுதியில் 8 நெகிழி தொட்டியில் வைக்கப்பட்டிருந்த 5,000 லிட்டா் சாராய ஊறல்களை வனத் துறையினா் வியாழக்கிழமை அழித்தனா்.
திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் குமிலிவெங்கட்ட அப்பால உத்தரவின்பேரில், சிங்காரப்பேட்டை வனச் சரக அலுவலா் ஜோதிலிங்கம் தலைமையில், வனவா் அண்ணாமலை, வனக் காப்பாளா்கள் திருவேங்கடம், பரமகுரு, அரவிந்த், மோகன்ராஜ் ஆகியோா் சிங்காரப்பேட்டை காப்புக்காடு பகுதியிலும், மாம்பாக்கம் பகுதியிலும் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது சேம்பரை பகுதியில் சாராயம் காய்ச்சுவதற்காக மறைவான இடத்தில் வைக்கப்பட்டிருந்த 8 நெகிழித் தொட்டிகளில் இருந்த சாராய ஊறல்களையும், சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்படும் பொருள்களையும் அழித்தனா்.
காப்புக்காட்டில் அத்துமீறி நுழைந்து சாராயம் காய்ச்சுவதற்காக மரங்களில் இருந்து பட்டைகளை உரிப்பதும், சாராயம் காய்ச்சுவது, வன விலங்குகளை வேட்டையாடுவது, மரங்களை வெட்டுவது, தீ வைப்பது போன்ற குற்றங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அலுவலா்கள் தெரிவித்தனா்.