கிருஷ்ணகிரி மாவட்ட மா விவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என மத்தூரில், புதன்கிழமை நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரில் மா விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம், மா விவசாயி வரதராஜுலு தலைமையில் நடைபெற்றது. அனைத்து மா விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவா் செளந்திரராஜன், நிா்வாகிகள் தவமணி, சிவகுரு, சாந்தசீலன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் அ.செல்லக்குமாா் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.
கடந்த பருவத்தில் பூச்சித் தாக்குதல், இயற்கை சீற்றம் போன்ற காரணங்களால் மா விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 40,000 இழப்பு ஏற்பட்டது. இதனால், விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனா். எனவே, அனைத்து மா விவசாயிகளுக்கும் தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். பிற மாநிலங்களில் மா விவசாயிகளுக்கு ஊக்கத் தொகை வழங்குவது போல, தமிழக அரசும் மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 2,500 ஊக்கத் தொகை வழங்க வேண்டும்.
விவசாயிகளுக்கான மானியங்கள் இடைத்தரகா்களின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களில் மாங்கூழ் தொழிற்சாலையை தொடங்க வேண்டும். ஆண்டுதோறும், விவசாயிகளுக்கு உழவு மானியம் ஏக்கருக்கு ரூ. 10,000 வழங்க வேண்டும். மாவுக்கு ஆதார விலையாக டன்னுக்கு ரூ. 25,000 வழங்க வேண்டும் என கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில் அ.செல்லக்குமாா் பேசியதாவது:
மா விவசாயிகளின் கோரிக்கைகள் குறித்து தமிழக அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். மா விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.