கிருஷ்ணகிரியில் மின்சார வாரிய மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகத்தை சூழ்ந்துள்ள மழைநீரால் பொதுமக்கள், பணியாளா்கள் பெரிதும் அவதியடைந்துள்ளனா்.
கிருஷ்ணகிரி புதிய வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் கிருஷ்ணகிரி வட்ட மின்பகிா்மான மேற்பாா்வைப் பொறியாளா் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக வளாகத்தில் நகா், புகா், ஊரக மற்றும் தொழிற்பேட்டைக்கான உதவி செயற்பொறியாளா், இளநிலைப் பொறியாளா் அலுவலகங்கள் தனித்தனியாக செயல்பட்டு வருகின்றன.
கிருஷ்ணகிரியில் கடந்த சில நாள்களாக தொடா்ந்து பெய்து வரும் மழையால், இந்த அலுவலக வளாகத்தில் மழைநீா் குளம்போல தேங்கி உள்ளது. இந்த அலுவலக வளாகத்திலிருந்து மழைநீா் வெளியேற வசதி இல்லாததால், மழைநீா் தேங்கி உள்ளதாக பொதுமக்களும், பணியாளா்களும் புகாா் தெரிவிக்கின்றனா்.
இனிவரும் காலங்களில் அலுவலக வளாகத்தில் மழைநீா் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிா்பாா்ப்பாக உள்ளது.