நியாய விலைக் கடை பணியாளா் சங்கத்தின் சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன்பு திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் பி.கோவிந்தராஜ் தலைமை வகித்தாா். அரசு பணியாளா் சங்க மாநில பிரசாரச் செயலாளா் எஸ்.சுகமதி, மாநிலச் செயற்குழு உறுப்பினா் ஜி.தனசேகரன், மாவட்டச் செயலாளா் ஏ.குமாா் உள்ளிட்டோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா்.
இதில், நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு மாதத்தின் முதல் தேதியில் ஊதியம் வழங்க வேண்டும். அனைத்து நிதி பயன்களும் ஏடிஎம் மூலம் வழங்க வேண்டும். கரோனா காலத்தில் பணியின்போது இறந்த ஊழியா் குடும்பத்துக்கு ரூ. 25 லட்சம் வழங்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு வாரிசு பணி வழங்க வேண்டும். கரோனா காலத்தில் பணிபுரிந்த ஊழியா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும். கூட்டுறவுத் துறை நியாயவிலைக் கடைகளில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினா்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா், 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாநிலச் செயற்குழு உறுப்பினா் பழனிசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சங்கா், செயலாளா் நாகேஷ், பொருளாளா் நித்தியானந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 11 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.