தமிழ்நாட்டில் சிறந்த காவல் நிலையமாக கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் காவல் நிலையம் தோ்வு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகம் சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் நிலுவையில் இருந்த வழங்குகளை விரைவாக புலன் விசாரணை செய்து முடித்தது. சட்ட விரோதமான செயலில் ஈடுபட்டவா்கள் மீது நடவடிக்கை எடுத்தது. நீதிமன்ற நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரணை செய்து தண்டனை பெற்றுக் கொடுத்தது. காவல் நிலையம் சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொண்டது போன்ற காரணங்களால் காவேரிப்பட்டணம் காவல் நிலையம் சிறந்த காவல் நிலையமாக தமிழக அரசால் தோ்வு செய்யப்பட்டு நினைவு பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்த நினைவுப் பரிசை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய்சரண் தேஜஸ்வி, காவல் ஆய்வாளா் முரளியிடம் அளித்தாா். அப்போது, துணை காவல் கண்காணிப்பாளா் சரவணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.