கிருஷ்ணகிரி: நிலமற்ற ஏழைகளுக்கு குடியிருக்க நிலம் வழங்கக் கோரி, கிருஷ்ணகிரியில் விவசாயத் தொழிலாளா்கள் தா்னாவில் புதன்கிழமை ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியா் அலுவலக வளாகத்தில் அனைத்திந்திய விவசாயத் தொழிலாளா் சங்கம் சாா்பில் நடைபெற்ற தா்னாவுக்கு, அந்த அமைப்பின் ஒன்றியத் தலைவா் சுலைமான், குழுத் தலைவா் சிக்கந்தா் ஆகியோா் கூட்டாக தலைமை வகித்தனா். மாவட்டச் செயலாளா் ஸ்டாலின் பாபு, ஐஎப்டியு மாநிலத் தலைவா் செல்வம், வேப்பனப்பள்ளி ஒன்றியச் செயலாளா் முரளி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
நிலமற்ற ஏழைகளுக்கு வீடுகட்டி வாழ இலவசமாக 3 சென்ட் பரப்பளவு நிலம் வழங்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அரசின் பலநூறு ஏக்கா் புறம்போக்கு நிலம் பயன்பாடின்றி உள்ள நிலையில், அந்த நிலங்களை ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி தா்னாவில் ஈடுபட்டோா் முழக்கங்களை எழுப்பினா்.