ஒசூரில் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்களுக்கான சிறப்புத் தொழில் கடன் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தின் கீழ் குறு, சிறு, நடுத்தரத் தொழில் சேவை பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகள், சேவை நிறுவனங்களை நிருவுவதற்கும், தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுப்படுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு திட்டங்களின் கீழ் கடனுதவி வழங்கப்படுகிறது.
அதன்படி, ஒசூா் பிளாட் எண் 308, 309, சிப்காட் தொழில் வணிக வளாகத்தில் செயல்படும் கிளை அலுவலகத்தில் ஆக. 17 ஆம்தேதி முதல் செப். 2 வரையும், ஒசூா், மூக்காண்டப்பள்ளி, சிப்காட் இன்டஸ்டிரியல் வணிக வளாகத்தில் உள்ள ஓட்டல் ஹில்ஸ்சில் 27-ஆம் தேதியும் சிறப்பு தொழில் கடன் வழங்கும் முகாம் நடைபெறவுள்ளது.
இதில் அரசின் மானியம் தொழில் திட்டங்கள் குறித்து விளக்கம் தரப்படும்.
தகுதியான தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ. 75 லட்சம் வரையும் மாநில முதலீட்டு மானியமாக 25 சதவீத இயந்திரங்களின் மதிப்பீட்டில் அதிகபட்சமாக ரூ. 1.50 கோடி வரை கடனுதவி முகாமில் வழங்கப்படும்.
விண்ணப்பங்களுக்கு ஆய்வுக் கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை அளிக்கப்படும். நீட்ஸ் திட்டத்துக்கு ஆய்வுக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்படுகிறது. தொழில்முனைவோா் இதைப் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு 04344 - 278876, 275596 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம்.