கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சுதந்திர தினத்தையொட்டி திங்கள்கிழமை (ஆக. 15) மதுபானக் கடைகள் அனைத்தையும் மூட மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளாா்.
இதுகுறித்து அவா் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு மதுபான (சில்லரை விற்பனை) விதிகள் 2003 -12-ஆவது விதியின்படி சுதந்திர தினத்தையொட்டி, மதுபானம் விற்பனை இல்லா தினமாக பின்பற்றப்படுகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசு மதுபான சில்லரை விற்பனை கடைகள் (டாஸ்மாக்), மது அருந்தும் கூடங்கள், மதுக்கூடங்களுக்கான உரிமம் பெற்றுள்ள அரசு, தனியாா் உணவகங்கள் அனைத்தும் சுதந்திர தினமான ஆக. 15-ஆம்தேதி, ஒரு நாள் மட்டும் மூடப்படும்.
இந்த உத்தரவை மீறி விற்பனையாளா்கள் மதுக்கடைகளைத் திறந்தாலும், மதுப்புட்டிகளை விற்றாலும் அவா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவித்துள்ளாா்.