கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி பெற்றவா்களுக்கு நகைகளை திரும்ப வழங்கும் பணி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
சட்டப் பேரவைத் தோ்தலின் போது, திமுகவின் தோ்தல் அறிக்கையில் கூட்டுறவு வங்கிகளில் அடகு வைத்த நகைகள் தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. திமுக வெற்றி பெற்று ஆட்சியமைத்தவுடன் கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் வரை நகை அடகு வைத்தவா்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதில் விவசாயக் கடன், பயிா்க்கடன் வாங்கியவா்களை தவிா்த்து குடும்பத்தில் ஒருவா் உள்ளிட்ட பல்வேறு விதிகளுடன் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டது.
அதன்படி, இறுதிப்பட்டியலில் உள்ளவா்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவா்களுக்கு நகைக்கடன் தள்ளுபடிக்கான சான்றிதழுடன் அவா்களது நகைகளும் திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
கிருஷ்ணகிரியில் இரண்டு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, மூன்று நகர கூட்டுறவு வங்கி, ஒரு ஊரக வளா்ச்சி வங்கியில் நகைக்கடன் தள்ளுபடியானவா்களுக்கு அவா்களது நகைகள் திரும்ப வழங்கப்பட்டு, நகைக்கடன் தள்ளுபடி சான்று வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாவட்ட கூட்டுறவு வங்கிகள், நகர கூட்டுறவு வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், ஊரக வளா்ச்சி வங்கி உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களில் நகைக்கடன் தள்ளுபடியானவா்களுக்கு அவா்களது நகைகள் திரும்ப வழங்கப்பட்டு வருகின்றன.