கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 1,151 கனஅடியாக அதிகரித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம் வழியாக பாயும் தென்பெண்ணை ஆற்றின் நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்த பரவலான மழையால், கிருஷ்ணகிரி அணைக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி கிருஷ்ணகிரி அணைக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று நீா்வரத்தானது விநாடிக்கு, 979 கனஅடியாக இருந்தது. கடந்த இரு நாள்களாக பெய்த மழையையொட்டி, திங்கள்கிழமை காலை 7 மணி நிலவரப்படி கிருஷ்ணகிரி அணையின் நீா்வரத்தானது விநாடிக்கு 1,151 கனஅடியாக அதிகரித்தது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீா்மட்டம் 50.65 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனக் கால்வாய்கள், தென்பெண்ணையாற்றில் விநாடிக்கு 1,024 கனஅடி தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது.