காவேரிப்பட்டணத்தில் கட்சி பதாகைகள் வைக்க அனுமதி அளிக்கப்பட்ட விவகாரத்தில் அதிமுக, திமுவினா் தனித்தனியே சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி திமுக கிழக்கு மாவட்டச் செயலாளராக தே.மதியழகன் எம்எல்ஏ தோ்வு செய்யப்பட்டுள்ளாா். வெள்ளிக்கிழமை கிருஷ்ணகிரிக்கு வந்த மதியழகனை வரவேற்கும் வகையில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பா்கூா், போச்சம்பள்ளி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திமுகவினா் பதாகைகளை வைத்திருந்தனா்.
காவேரிப்பட்டணத்தில் பேருந்து நிலையம் அருகே திமுகவினா் வைத்திருந்த பதாகைகள், பொதுமக்களுக்கு இடையூறாக இருப்பதாகவும், அதிமுகவினா் பதாகைகள் வைக்க அனுமதிக்காமல் திமுகவினருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதை கண்டித்து காவேரிப்பட்டணம் காவல் நிலையம் அருகே அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினா் கே.பி.எம். சதீஷ்குமாா், ஒன்றியக் குழுத் தலைவா் பையூா் ரவி உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்டோா் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதையடுத்து திமுகவினரின் பதாகைகளை போலீஸாா் அப்புறப்படுத்தினா். இதைக் கண்டித்து, காவேரிப்பட்டணம் பேருந்து நிலையம் அருகே திமுகவினா் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்த துணைக் காவல் கண்காணிப்பாளா் சரவணன், வட்டாட்சியா் சம்பத் உள்ளிட்டோா் திமுகவினரைச் சமரசம் செய்தனா். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இரு கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.