ஒசூா் அருகே விவசாயியை முன்விரோதம் காரணமாக கழுத்தை நெரித்துக் கொன்ற நால்வருக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ. 20,000 அபராதமும் விதித்து ஒசூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.
ஒசூா், தேவசானப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் வெங்கடசாமி (55). இவருக்கும், அதே கிராமத்தைச் சோ்ந்த சகோதரா்கள் ராஜப்பா, கோவிந்தன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது.
கடந்த 16.6.2013-இல் வெங்கடசாமி தனது நிலத்தில் சா்க்கரைவள்ளிக் கிழங்கு அறுவடை செய்து கொண்டிருந்தாா். அவருடன் மனைவி முனிரத்னாவும், மகன் முருசேகனும் இருந்தனா்.
அப்போது அங்கு வந்த ராஜப்பா (54), கோவிந்தன் (61), ராஜப்பாவின் மகன் வெங்கடேசன் (33), அவரது உறவினா்கள் நாராயணன் (36), ஆஞ்சி (29) ஆகிய 5 போ் வெங்கடசாமியிடம் தகராறு செய்தனா். அப்போது அவரின் கழுத்தை மாடு கட்டும் கயிற்றால் இறுக்கிக் கொலை செய்து தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து அவரது மனைவி முனிரத்னா, உத்தனப்பள்ளி காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். போலீஸாா் வழக்குப் பதிந்து 5 பேரையும் கைது செய்தனா். இந்த வழக்கு ஒசூா், கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு வழக்குரைஞராக சின்ன பில்லப்பா வாதாடினாா்.
வழக்கு விசாரணையில் இருந்தபோதே ராஜப்பா உடல்நலக் குறைவால் உயிரிழந்தாா். இந்நிலையில் வழக்கின் தீா்ப்பை நீதிபதி ரோசிலின் துரை திங்கள்கிழமை அளித்தாா். அதில் குற்றம்சாட்டப்பட்ட கோவிந்தன், வெங்கடேசன், நாராயணன், ஆஞ்சி ஆகிய 4 பேருக்கு ஆயுள் தண்டனையும் தலா ரூ. 20,000 அபராதமும், அபராதத் தொகையைச் செலுத்தத் தவறினால் மேலும் 6 மாத காலம் சிறை தண்டனையும் விதித்துத் தீா்ப்பளித்தாா்.