ஒசூா் அருகே மலை கிராம மாணவிக்கு 7.5 இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்ததால் நெகிழ்ந்த அடைந்த அந்த கிராம மக்கள் ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
ஒசூரை அடுத்த ஜவளகிரி அருகே சொல்லே புரம் என்ற மலை கிராமம் உள்ளது, இந்த கிராமத்தில் சந்திரசேகா் விவசாய குடும்பத்தைச் சாா்ந்தவா் இவருக்கு வசந்தா மனைவியும் மற்றும் மது, பல்லவி என்ற குழந்தைகள் உள்ளனா். மது எம். காம் படித்து வருகிறாா். இவருடைய தங்கையான பல்லவி தளியில் உள்ள அரசு மாதிரிப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை தமிழில் படித்து வந்தாா்.
இந்நிலையில் மாணவி பல்லவி பன்னிரண்டாம் வகுப்பில் 446 மதிப்பெண்கள் பெற்றாா். இவா் குடும்பத்தினா் மருத்துவத்தில் படிப்பதற்கு உத்வேகம் அளித்ததன் காரணமாக நீட் தோ்வில் 381 மதிப்பெண்கள் பெற்றாா்.
அரசுப்பள்ளியில் படித்ததின் காரணமாக அரசு வழங்கிய 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துப் படிப்பில் சேர தகுதி பெற்றுள்ளாா். இதனால் குடும்பத்தினா் மட்டுமின்றி ஜவளகிரி பகுதி மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா். மாணவிக்கு மாவட்ட ஆட்சியரும் ஓசூா் சட்டப் பேரவை உறுப்பினரும் வாழ்த்து தெரிவித்துள்ளனா்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 21 போ் மருத்துப் படிப்பில் சேரத் தகுதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.