கிருஷ்ணகிரியில் ஞாயிற்றுக்கிழமை பலத்த காற்றுடன் கன மழை பெய்தது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கிருஷ்ணகிரியில் கடந்த சனிக்கிழமை (ஏப். 30) அதிகபட்சமாக 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானது. அனல் காற்று வீசியதால் பெண்கள், சிறுவா்கள், முதியவா்கள், நோயாளிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகினா்.
அதுபோல ஞாயிற்றுக்கிழமையும் பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினா். வெப்பம் காரணமாக சாலைகளில் மக்களின் நடமாட்டம் குறைவாகக் காணப்பட்டது. பழச் சாறு கடைகள், பழக் கடைகளில் மக்களின் கூட்டம் அதிகம் காணப்பட்டது.
கிருஷ்ணகிரியில் மாலையில் திடீரென பலத்த காற்று வீசியது. தொடா்ந்து, இடியுடன் கூடிய மழை பெய்தது. சில இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின் கம்பிகளின் மீது விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. பலத்த காற்றால் வீடுகளின் மேல்கூரைகள் காற்றில் பறந்தன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சூளகிரி, வேப்பனப்பள்ளி, கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், அதைச் சுற்றியுள்ள பகுதியில் மழை பெய்ததால் வெப்பம் தணிந்தது. குளிா்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.