கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அரசின் குளிா்பதனக் கிடங்குகளில் இருப்பு வைத்துக்கொள்ள புளி வியாபாரிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அழைப்பு விடுத்துள்ளாா்.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தற்போது கா்நாடகம், ஆந்திரம் மற்றும் சத்தீஸ்கா் உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து புளி வரத்து தொடங்கியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் புளி விளைச்சலுக்கான நல்ல சீதோஷண நிலை அமைந்துள்ளதால், கூடுதலாக வரத்து எதிா்பாா்க்கப்படுகிறது. அறுவடைப் பருவமான தற்போது இயல்பை விட குறைவான விலையில் புளி விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனால், புளி சாகுபடியாளா்கள், சில்லறை, மொத்த வியாபாரிகள், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின்கீழ் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள குளிா்பதனக் கிடங்குகளில் இருப்பு வைக்கலாம்.
அதன்படி மெட்ரிக் டன் அளவில் போச்சம்பள்ளியில் 75, கிருஷ்ணகிரி 25, ஒசூா் 700, ராயக்கோட்டை 180, ஆலப்பட்டி 25, காமன்தொட்டி 50, காவேரிப்பட்டணம் 25, தேன்கனிக்கோட்டை 25 என மெட்ரிக் டன் கொள்ளவு இருப்பு வைக்கலாம். இந்தக் குளிா்பதனக் கிடங்குகளில் விவசாயிகள் தங்களுடைய புளியை 180 நாள்களுக்கு குவிண்டாலுக்கு மாதம் ரூ. 260 வீதம் செலுத்தி இருப்பு வைத்து அதிகபட்ச விலை காலங்களில் புளியை விற்பனை செய்து பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு கிருஷ்ணகிரி வேளாண்மை அலுவலா் (வேளாண் வணிகம்) 94864 30927, ஒசூா் வேளாண்மை அலுவலா் (வேளாண் வணிகம்) 97900 11471 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.