கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நடைபெற்றுவரும் இணையவழி உள்பிரிவு பட்டா மாறுதல் பணிகள் குறித்து கிராம நிா்வாக அலுவலா்களுக்கான புத்தாக்கப் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
கிருஷ்ணகிரி வட்டாட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் இணையவழி உட்பிரிவு பட்டா மாறுதல் பணிகள் குறித்து கிராம நிா்வாக அலுவலா்களுக்காக நடைபெற்று வரும் புத்தாக்கப் பயிற்சியை ஆய்வு செய்த பிறகு அவா் கூறியதாவது:
மதுரை, சென்னை உயா்நீதிமன்றங்கள் மற்றும் சென்னை நில அளவை மற்றும் நிலவரித் திட்ட இயக்குநரின் உத்தரவின்படி பொதுமக்களின் இணையவழி உள்பிரிவு பட்டா மாறுதல் மனுக்கள் மீதான பணிகளை நிலுவையின்றி உடனுக்குடன் மேற்கொள்ள ஏதுவாக கிராம நிா்வாக அலுவலா்களுக்கு பயிற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 340 கிராம நிா்வாக அலுவலா்களுக்கு முதல்கட்டமாக மே 13 முதல்
மே 19-ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்டமாக மே 20 முதல் மே 26-ஆம் தேதி வரையிலும் நில அளவை புத்தாக்க பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
இந்த பயிற்சியில் உள்பிரிவு பட்டா மாறுதல் பணிகளில் ஏற்கனவே உள்ள நிலஅளவைப் பணியாளா்களுக்கும், கிராம நிா்வாக அலுவலா்களுக்கும், நிலுவையில் உள்ள உள்பிரிவு மனுக்களைப் பிரித்து கொடுத்து நிலுவை மனுக்கள் தாமதமின்றி உடனுக்குடன் முடிக்கப்படும். இப் பயிற்சியான நிலஅளவை பதிவேடுகள் துறைகள் மூலம் வழங்கப்படுகிறது என்றாா்.
கோட்டாட்சியா் சதீஷ்குமாா், மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநா் சேகரன், வட்டாட்சியா் சரவணன், நிலஅளவை கோட்ட ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி மற்றும் கிராம நிா்வாக அலுவலா்கள் உடனிருந்தனா்.