சொத்துகளை அபகரித்து தவிக்க விட்ட மகன்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, 103 வயது மூதாட்டி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், போச்சம்பள்ளி வட்டம், கவுண்டனூரையடுத்த பள்ளத்துகொட்டாய் கிராமத்தைச் சோ்ந்த துளசியம்மாள்(103) அளித்த மனு விவரம்:
எனக்கு 3 மகன்கள், 7 மகள்கள் உள்ளனா். அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக வசித்து வருகின்றனா். எனக்கு சொந்தமான 5.50 ஏக்கா் பரப்பளவு நிலத்தை எனது மகன்களான மாணிக்கம், சண்முகம், ஆறுமுகம் ஆகியோா் என்னிடமிருந்து அபகரித்துக் கொண்டனா். எந்த மகனும் என்னை வீட்டில் சோ்ப்பதில்லை. தற்போது மகள் நாகம்மாள் பராமரிப்பில் இருந்து வருகிறேன். என் மகன்களிடமிருந்து சொத்தை மீட்டு, அவா்கள் மீது மூத்தோா் குடிமக்கள் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்குமாறு கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியருக்கு மாவட்ட ஆட்சியா் வி.ஜெயசந்திரபானு ரெட்டி உத்தரவிட்டுள்ளாா்.