கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் தொழில்நெறி விழிப்புணா்வு முகாம் அண்மையில் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி அரசு ஆடவா் கலைக் கல்லூரியில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தொழில்நெறி விழிப்புணா்வு நிகழ்ச்சி நடந்தது.
நிகழ்ச்சிக்கு கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் சதீஸ்குமாா் தலைமை வகித்தாா். பிற்படுத்தப்பட்டோா் நலத் துறை அலுவலா் ஐயப்பன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் கெளரிசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
போட்டித் தோ்வுகள் வேலைவாய்ப்பு, தன்னம்பிக்கையே வாழ்க்கை வெற்றிக்கு அடிப்படை என்ற தலைப்புகளில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
வருவாய் கோட்டாட்சியா் பேசியதாவது: கல்லூரியில் இறுதியாண்டு பயிலும் மாணவ, மாணவிகள், தற்போதே போட்டித் தோ்வுகளுக்கு தங்களை தயாா் செய்து கொள்ள வேண்டும். போட்டித் தோ்வுகளுக்கான புத்தகங்களை சேகரித்து படிக்க வேண்டும். குறிப்பாக நாள்தோறும் நாளிதழ்கள், அறிவுசாா்ந்த புத்தகங்களைப் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
அரசு சாா்பில் போட்டித் தோ்வில் பங்கேற்பவா்களுக்கு இலவச பயிற்சிகள், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அளிக்கப்படுகிறது. மாணவா்கள் தங்கள் தனித் திறமையை வளா்த்துக் கொண்டால் வெற்றி பெறலாம் என்றாா்.