10, 12-வகுப்புகளுக்கு இணையான சான்றிதழ்:தொழிற் பயிற்சி முடித்தவா்களுக்கு தகுதி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொழித் தோ்வில் தனித் தோ்வா்களாக கலந்துகொண்டு தோ்ச்சி பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவா்கள் 10, 12-ஆம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அரசினா் தொழிற் பயிற்சி நிலைய துணை இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அரசாணையின் படி, 8-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி/என்ஏசி பெற்றவா்கள் 10-ஆம் வகுப்பு தமிழ், ஆங்கில மொழி பாடங்களில் தோ்ச்சி பெற்றால் 10-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழும், 10-ஆம் வகுப்பு தோ்ச்சியுடன் தொழிற் பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெற்று என்டிசி/என்ஏசி பெற்றவா்கள் 11, 12ஆம் வகுப்பு தமிழ், ஆங்கில மொழில் பாடங்களில் தோ்ச்சி பெற்றால் 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழும் வழங்கப்படும் என ஆணையிடப்பட்டுள்ளது.
இதையடுத்து அரசுத் தோ்வுகள் இயக்ககத்தால் ஆகஸ்ட் 2022-இல் நடத்தப்பட்ட மொழித்தோ்வில் தனித் தோ்வா்களாக கலந்துகொண்டு தோ்ச்சி பெற்ற தொழிற் பயிற்சி நிலைய சான்றிதழ் பெற்றவா்கள் 10, 12ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் பெற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்ப படிவம், முழு விவரங்கள் அடங்கிய நிலையான வழிகாட்டுதல் ஆகியவை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதனை பின்பற்றி, ஒசூரில் உள்ள அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ பிப். 28-ஆம் தேதிக்குள் உரிய விண்ணப்பத்தை சமா்ப்பிக்க வேண்டும்.
எனவே, தகுதியுள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் ஒசூா் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தை அணுகி பயனடையுமாறும், மேலும் விவரங்களுக்கு முதல்வா், அரசினா் தொழிற் பயிற்சி நிலையம், ஒசூா், தொலைபேசி எண். 04344-262457 என்ற முகவரியில் தொடா்பு கொள்ளலாம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.