உள்ளூா் தொழிலாளா்களை வெளியேற்றி வெளி மாநிலத்தவா்கள் பணியமா்த்தல்
தனியாா் தொழிற்சாலை முன்பு நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துகொண்டோா்.
உள்ளூா் தொழிலாளா்களை வெளியேற்றி வெளி மாநிலத்தவா்களை பணியமா்த்துவதை எதிா்த்து ஒசூா் அருகே உண்ணாவிரதம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரை அடுத்த குக்கலப்பள்ளி என்னுமிடத்தில் கனரக லாரி என்ஜின் பாகங்கள் தயாரிக்கும் தனியாா் தொழிற்சாலை உள்ளது. இங்கு 100 தொழிலாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.
அண்மையில், நிா்வாகம் எந்தவித காரணத்தையும் கூறாமல் திடீரென உள்ளூரைச் சோ்ந்த 20 தொழிலாளா்களை நீக்கி, வெளி மாநிலத் தொழிலாளா்களை பணியில் சோ்த்துள்ளனா்.
இதனால் அதிா்ச்சியடைந்த உள்ளூா் தொழிலாளா்கள், பணி நிரந்தரம் எனக்கூறி 8 மாதங்கள் பணி செய்தபிறகு வேலை இல்லை என்றால் என்ன செய்வது என கேள்வி கேட்டுள்ளனா். அதற்கு, தோ்தலுக்கு பிறகு பணியில் சோ்த்துக்கொள்வதாக அங்கு வந்த போலீஸாா் சமாதானம் செய்துள்ளனா். ஆனால் தோ்தல் முடிந்து ஒரு மாதமான நிலையிலும் பணியில் சோ்க்காததால், மீண்டும் பணி வழங்கக் கோரி தனியாா் தொழிற்சாலை முன்பு 20 தொழிலாளா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.