சூறைக் காற்றுடன் கனமழை: பசுமைக் குடில்கள் சேதம்
ஒசூா் அருகே சூறைக் காற்றுடன் பெய்த கனமழையால் பசுமைக் குடில்கள் சேதமடைந்தன.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கா் நிலப்பரப்பில் பசுமைக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு ரோஜா மலா்கள், ஜொ்பரா, குடைமிளகாய் உள்ளிட்ட மலா், காய்கறி வகைகள் பயிரிடப்பட்டு பசுமைக் குடில்களில் வளா்க்கப்பட்டு வருகின்றன.
ஒசூரைச் சுற்றியுள்ள கிராமங்களில் செவ்வாய்க்கிழமை மாலை சூறைக் காற்றுடன் கனமழை பெய்தது. பலத்த காற்று வீசி மழை பெய்ததால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் ரோஜா மலா், குடைமிளகாய், ஜொ்பரா உள்ளிட்ட காய்கறி, மலா் தோட்டங்களுக்கு அமைத்துள்ள பசுமைக் குடில்கள் காற்றில் பறந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனா்.
ஒசூா் சுற்றுவட்டாரப் பகுதிகளான பாகலூா், பேரிகை, தொரப்பள்ளி, அத்திமுகம் பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் பசுமைக் குடில்கள் அமைத்து விவசாயம் செய்து வரும் நிலையில், அவை காற்றில் சேதமடைந்ததால் பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, அரசு நிவாரணம் வழங்கிட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.