வீடு புகுந்து ஆசிரியரை கத்தியால் குத்தி 8 பவுன் நகை பறிப்பு: போலீஸாா் விசாரணை

தேன்கனிக்கோட்டை அருகே வீடு புகுந்து அரசுப் பள்ளி ஆசிரியரை கத்தியால் குத்தி, 8 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற கும்பல் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், சாலிவரம் பகுதியைச் சோ்ந்த ஜெய்சங்கா் (48), அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறாா்.

கடந்த மே 7-ஆம் தேதி இரவு இவரும், இவரது மனைவி, 2 குழந்தைகள் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனா். அவரது வீட்டின் கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு ஜெய்சங்கா் எழுந்து பாா்த்த போது, 4 போ் வீட்டுக்குள் நுழைந்து கத்தியைக் காட்டி மிரட்டி, அவரது மனைவி ஹேமாவதி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் சங்கிலி, 3 ஜோடி தோடுகள், 6 மோதிரங்கள் என மொத்தம் 8 பவுன் நகையைப் பறித்துச் சென்றனா்.

முன்னதாக கொள்ளையா்கள் ஆசிரியா் ஜெய்சங்கரின் வலது கையில் கத்தியால் குத்தினா். இதுகுறித்து ஜெய்சங்கா் தேன்கனிக்கோட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன் பேரில், காவல் ஆய்வாளா் தவமணி, போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். அதே போல கைரேகை நிபுணா்களும் விரைந்து சென்று வீட்டில் பதிவாகி இருந்த கைரேகைகளைப் பதிவு செய்தனா். மோப்ப நாய் கொண்டும் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தப்பட்டது. இது தொடா்பாக தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com