ஊராட்சி நிதி ரூ.5 லட்சத்தை மோசடி செய்ததாக அதன் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் க.மகரபூஷணம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.செல்வராஜ் முன்னிலை வகித்தார். அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இதில் சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டிணம் ஒன்றியத்துக்குள்பட்ட
எம்.பாலப்பட்டி ஊராட்சி உறுப்பினர்கள் கே.கோகிலா, செல்வம், யுவராஜ் ஆகியோர் ஆட்சியர் க.மகரபூஷணத்திடம் அளித்த மனு விவரம்:
எம்.பாலப்பட்டி ஊராட்சியில் கழிவுநீர்க் கால்வாய் அமைக்கும் பணிக்காக மாவட்ட ஆட்சியரின் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.ஆனால், ஊராட்சி மன்றத் தலைவர் மேற்கண்ட பணியை செய்யாமல், வேறொரு பகுதியில் அமைக்கப்பட்ட கழிவு நீர்க் கால்வாயை புகைப்படம் எடுத்துக்காட்டி ரூ.5 லட்சத்தை மோசடி செய்துள்ளார். அவருக்கு ஊராட்சி மன்றத் துணைத் தலைவர், ஒன்றிய அலுவலர்கள் துணையாக இருந்துள்ளனர். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை வாங்கித் தருவதாக மோசடி:
ஓமலூர் அருகேயுள்ள பூமிநாயக்கன்பட்டியைச் சேர்ந்த கே.முருகன் தனது மனைவி, மகனுடன் வந்து ஆட்சியரிடம் அளித்த மனுவின் விவரம்:
நியாய விலைக் கடையில் விற்பனையாளர் பணிக்கு ஆள் எடுப்பதாக தகவல் தெரிந்து, அந்த வேலையை எனது மகன் வெங்கடேஷுக்கு வாங்கித் தருவதற்காக அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவரிடம் ரூ.2.50 லட்சம் அளித்தேன். பணத்தைப் பெற்றுக் கொண்ட அவர் வேலையும் வாங்கித் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டுத்தர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.