இளம்பிள்ளை சந்தைப்பேட்டையில் ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள வீடுகள் மற்றும் திடக்கழிவு மேலாண்மை திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இளம்பிள்ளை சந்தைப்பேட்டை ஏரியை சுத்தப்படுத்தக் கோரி பல்வேறு தரப்பினர் மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.2.36 கோடியில் ஏரியை தூய்மைப்படுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. அதில், ஏரியை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த 105 வீடுகள் வருவாய்த் துறை சார்பில் அகற்றப்பட்டன. இதனையடுத்து மீதமுள்ள 28 ஆக்கிரமிப்பு வீடுகளையும் அகற்றுவது குறித்து மாவட்ட ஆட்சியர் ரோகிணி ராம்தாஸ் பார்வையிட்டார். இதனையடுத்து ஆட்சியரிடம், ஏழுமாத்தானூர் ஏரியை தூர்வாரி தூய்மைப்படுத்த கோரியும், இளம்பிள்ளை ஏரியில் நடைபெற்று வரும் பணியை விரைந்து முடிக்கக் கோரியும் பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.
இந்த ஆய்வின்போது சேலம் வருவாய் கோட்டாட்சியர் குமரேஸ்வரன், சேலம் தெற்கு வட்டாட்சியர் பத்ம பிரியா, வட்ட துணை ஆய்வாளர் கண்ணன், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கண்ணன், உதவி செயற்பொறியாளர் செல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.