பெத்தநாயக்கன்பாளையம் வட்டத்துக்குள்பட்ட சூலாங்குறிச்சி உண்டு உறைவிடப் பள்ளியில் முறைகேடு நடப்பதாகக் கூறி, கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இந்தப் பள்ளியில் இருந்த அரிசி, பருப்பு, முட்டை போன்ற பொருள்கள் காணாமல் போனதாக, பள்ளி சமையலரான பாக்கியராஜ் புகார் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், பள்ளியில் இருந்து 30 கிலோ அரிசியுடன் பாக்கியராஜ் வெளியே சென்றதாகவும், அவரை பிடித்து வைத்துள்ளதாகவும் சூலாங்குறிச்சி காவல் நிலையத்துக்கு கிராம மக்கள் தகவல் அளித்தனர். அப்போது, போலீஸார் தாமதம் ஆனதால் கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். விரைந்து சென்ற போலீஸார், கிராம மக்களை சமரசம் செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்திவருகின்றனர்.