சேலம் மாவட்டம், ஏற்காட்டில் பேருந்து நிலையம் மற்றும் லேடிசீட் ஊராட்சி ஒன்றிய கடைகளில், நடைபாதையை ஆக்கிரமித்து கட்டடம் கட்டிய குத்தகைதாரர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ஏற்காட்டில் சுற்றுலாப் பகுதியான லேடிசீட் மற்றும் பேருந்து நிலையத்தில் ஊராட்சி ஒன்றியத்துக்கு சொந்தமான கடைகளின் நடைபாதைகளை ஆக்கிரமித்து கட்டடம் கட்டப்பட்டு பொதுமக்களுக்கு இடையூறாக இருந்து வந்தது. இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய ஆணையர் சுந்தர் சார்பில், கடை குத்தகைதாரர்களுக்கு பத்து நாள்களுக்கு முன் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
இதையடுத்து, திங்கள்கிழமை ஆக்கிரமிப்புகளை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்ற காவல் துறையினருடன் ஊராட்சி அலுவலர்கள் வந்தனர். சில இடங்களில் அகற்றப்பட்ட நிலையில், தாங்களே அகற்றுவதாக ஆக்கிரமிப்பாளர்கள் கேட்டுக் கொண்டதால், அவர்களுக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.