உலக காசநோய் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு கருத்தரங்கம் பெரியார் பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்றது.
உயிரி வேதியியல் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் துறைத் தலைவர் பேராசிரியர் ஜி.சுதா வரவேற்றார். உயிரி அறிவியல் புல முதன்மையர் பேராசிரியர் ஆர்.பாலகுருநாதன், உலக காசநோய் தினத்தின் நோக்கம் குறித்து பேசினார். நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து துணைவேந்தர் சி.சுவாமிநாதன் பேசியது:
கடந்த ஓராண்டில் சர்வதேச அளவில் 10.04 மில்லியன் பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. 5.9 மில்லியன் ஆண்களும், 3.5 மில்லியன் பெண்களும், ஒரு மில்லியன் குழந்தைகளுக்கும் காசநோய் பாதிப்புள்ளது. எனினும், காசநோயால் உயிரிழப்பது 22 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த 17 ஆண்டுகளில் காசநோயால் பாதிக்கப்பட்ட 49 மில்லியன் பேர் உரிய மருத்துவ சிகிச்சை முறையால் காப்பாற்றப்பட்டுள்ளனர் என்றார்.
அவினாசிலிங்கம் பல்கலைக்கழக ஆராய்ச்சித் துறை இயக்குநர் ஜி.பி.ஜெயந்தி, சென்னை தேசிய காசநோய் ஆராய்ச்சி விஞ்ஞானி என்.எஸ்.கோமதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். உதவிப் பேராசிரியர் எம்.சூரியவதனா நன்றி கூறினார்.