தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றுவார் என நாம் இயக்கத்தின் தேசிய தலைவர் டி.ஆர்.கார்த்திகேயன் பேசினார்.
சேலம் ஜவஹர் மில் திடலில் நாம் அமைப்பின் சார்பில் தேசிய நீர்வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி தண்ணீர் மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் நாம் அமைப்பின் தேசிய தலைவரும், சிபிஐ முன்னாள் இயக்குநருமான டி.ஆர்.கார்த்திகேயன் பேசியது:
தமிழகத்தில் அடுத்த 20 ஆண்டுகளில் வரலாறு காணாத வறட்சி ஏற்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நிலத்தடி நீர்மட்டம் குறைவு, தண்ணீர் சேமிப்பு, தண்ணீர் மேலாண்மை இல்லாததே காரணமாகும். தண்ணீர் அத்தியாவசியமானது. தண்ணீரின்றி உயிர் வாழ முடியாது.
விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் கண்ணீர் வடிக்கின்றனர். தமிழகத்தில் எப்போதும் இல்லாத வறட்சி நிலவுகிறது. இதற்கு நீர் நிலைகளை முறையாகப் பராமரிக்காததே காரணமாகும். வரும் காலங்களில் குடிநீர்ப் பற்றாக்குறை அதிகமாகும்.
வாஜ்பாய் பிரதமராக இருந்த போது, தங்க நாற்காரச் சாலை திட்டத்தில் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை சாலைகளை இணைக்க திட்டமிட்டு அதிகாரிகளிடம் கருத்துக் கேட்டார்.
ஆனால், அதிகாரிகளோ இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாகத் தெரிவித்தனர்.
ஆனால், பிரதமர் வாஜ்பாயின் தொடர் தீவிர முயற்சியால் தங்க நாற்காரச் சாலை திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
அதேபோல தேசிய நீர்வழிச்சாலை அமைக்கும் திட்டத்தை தற்போது அமைக்க வேண்டும்.
இதை வலியுறுத்தி 1 கோடி பேரிடம் கையெùழுத்துப் பெறும் இயக்கம் நடத்தி வருகிறோம்.
தேசிய நீர்வழிச்சாலை அமைக்க வலியுறுத்தி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்த உள்ளேன். அதேபோல தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தை பிரதமர் மோடி நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.
மாநாட்டில் கடலில் வீணாகக் கலக்கும் நீரை திருப்பி தேசிய நதிகளை இணைக்க வேண்டும். ஏரி, குளங்களை தூர்வார வேண்டும். சீமைக் கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாநாட்டில் மாநிலத் தலைவர் பிரபு ராஜா மற்றும் பல்வேறு விவசாய சங்கப் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர்.