பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தில் நிதியுதவி பெற விண்ணப்பிக்கலாம்
முதல்வரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வா.சம்பத் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ள பெற்றோர் கடந்த 3 மாதத்துக்குள் விண்ணப்பிக்காமல் இருந்தால் உடனடியாக சம்பந்தபட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலர் அல்லது மகளிர் ஊர் நல அலுவலரைத் தொடர்பு கொண்டு உரிய சான்றிதழ்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் குடும்பத்தில் இரண்டு பெண் குழந்தைகள் மட்டும் இருந்து குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000-க்குள் இருத்தல் வேண்டும்.
அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் குடும்ப நல அறுவை சிகிச்சை செய்திருக்க வேண்டும். ஆண் வாரிசு இருக்கக் கூடாது. குழந்தை பிறந்து 3 வருடங்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இதன் அடிப்படையில் ஒரு பெண் குழந்தைக்கு நிலை 1- ன் கீழ் ரூ.50,000-ம், நிலை இரண்டின் கீழ் இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000-ம் வீதம் ரூ.50,000 வழங்கப்படும்.
மேலும், விவரங்களுக்கு மாவட்ட சமூக நல அலுவலக கண்காணிப்பாளர் 83000 51977 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். தகுதியுடைய பெற்றோர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.