எடப்பாடி, அதன் சுற்றுவட்டாரப் பகுதியில், மானாவாரிப் பயிரான நிலக் கடலை அறுவடை கடந்த சில நாள்களாக முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
கடந்த 9 ஆண்டுகளில் இல்லாத அளவு அதிக விளைச்சல் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
எடப்பாடி சுற்றுப்புறக் கிராமங்களான சித்தூர், செட்மாங்குறிச்சி, கொங்கணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிகளவில் நிலக்கடலை பயிரிடப்பட்டு வருகிறது.
பட்டாணி, ஏ.ஆர்.2, கொடிக்கடலை ரகங்கள் பெருமளவில் இப்பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நிலையில், நிகழாண்டில் உரிய நேரத்தில் சரியான அளவு மழை பொழிவு இருந்ததோடு கடலையைத் தாக்கும் கம்பளிபூச்சியின் தாக்குதல் இல்லை.
இதனால் நிகழாண்டில் எடப்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலக்கடலை பயிரிட்டுள்ள விவசாயிகள் அதிக மகசூல் கண்டுள்ளனர்.
மேலும் உலராத நிலையில் பட்டாணி ரக நிலக்கடலை 60 கிலோ கொண்ட மூட்டை ரூ. 800 முதல் ரூ. 1000 வரை விலை போகிறது.
கொடிக்கடலை ரகங்கள் ரூ. 700 முதல் ரூ. 900 வரை விலை போவதாக விவசாயிகள் கூறினர்.
மேலும் நிலக்கடலை அறுவடை செய்திட லிட்டர் ஒன்றுக்கு ரூ. 5 வழங்கப்படுகிறது. இருப்பினும் இப் பகுதியில் விவசாயக் கூலித் தொழிலாளர்கள் பற்றாக்குறை நிலவி வருவதால் தேசிய ஊரக வேலைவாய்ப்பு பணியாளர்களை விவசாயப்பணிகளில் அரசு ஈடுபடுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.