மாநில அளவிலான திருக்குறள் பேச்சு போட்டி: சேலம் மாணவி இரண்டாம் இடம்
ஸ்ரீராம் இலக்கிய கழகம் சார்பில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான திருக்குறள் பேச்சு போட்டியில் சேலம், குளூனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி இரண்டாம் இடம் பிடித்தார்.
இடைநிலை, உயர்நிலை, மேல்நிலைக் கல்வி, கல்லூரி என நான்கு பிரிவுகளில் நடைபெற்ற திருக்குறள் பேச்சுப் போட்டியில் கால் இறுதி சுற்று, அரை இறுதிச் சுற்றுகள் கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடைபெற்றன. இவற்றிக்கான இறுதிச் சுற்று சென்னையில் அண்மையில் நடைபெற்றது.
இதில் மாநில அளவில் இடைநிலைப் பிரிவில் முதல் பரிசை கோவை இஸ்லாமிய மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த ஃபைசியா, 2-ஆம் பரிசை சேலம் குளூனி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி மேகா, 3-ஆம் பரிசை ஈரோடு செங்குந்தர் மேல்நிலைப் பள்ளி மாணவர் தினேஷ் ஆகியோர் பெற்றனர். மேலும் மேல்நிலை, உயர்நிலைப் பிரிவு, கல்லூரிப் பிரிவு ஆகிய பிரிவில் முதல் இடம் பிடித்தோருக்கு ரூ. 10,000, 2-ஆம் பரிசாக ரூ. 7,500, 3-ஆம் பரிசாக ரூ. 5,000 கோப்பையும், சான்றிதழும் கொடுக்கப்பட்டன. மற்ற மாணவர்களுக்கு ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டன.