மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.51 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரியின் நீர்ப் பிடிப்பு பகுதிகள் மற்றும் மேட்டூர் அணையின் நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வந்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வந்தது. இந்த நிலையில், வியாழக்கிழமை இரவு மழை சற்று தணிந்தது. இதனால் வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நொடிக்கு 31,236 கன அடியிலிருந்து 21,264 கன அடியாகச் சரிந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 18,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால், வெள்ளிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.51 அடியாக உயர்ந்தது. அணையின் நீர் இருப்பு 61.66 டி.எம்.சி.