சந்தன கடத்தல் வீரப்பனின் நினைவிடத்தில், அவரது மனைவி முத்துலட்சுமி உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
சந்தன கடத்தல் வீரப்பன் தமிழக அதிரடிப் படையினரால் கடந்த 2004-ஆம் ஆண்டு அக்டோபர் 18-ஆம் தேதி சுட்டுகொல்லப்பட்டார். அவரது சடலம் மேட்டூர் அருகே உள்ள மூலக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது.
இந்த நிலையில், அவரது 13-வது நினைவு தினம் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. அவரது மனைவி முத்துலட்சுமி, குடும்பத்தினர், ஆதரவாளர்கள் அஞ்சலி செலுத்தினர்.
தீபாவளி தினம் என்பதால், வழக்கத்தைவிட குறைவானவர்களே அஞ்சலி செலுத்தினர். நினைவிடத்தில் போலீஸாரும், உளவுத் துறையினரும் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
அஞ்சலி செலுத்திய பின்னர் முத்துலட்சுமி கூறுகையில், "வீரப்பன் இருந்தவரையில், தமிழகத்திடம் கர்நாடகம் எந்த பிரச்னைக்கும் வரவில்லை. அவர் இறந்த பின்னர் காவிரி நீரை வழங்க மறுப்பதோடு ஓகேனக்கல்லுக்கும் கர்நாடகம் சொந்த கொண்டாட வருகிறது' என்றார்.