மகள் சாவில் சந்தேகம் இருப்பதாகக் கூறி ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெண் தீக்குளிக்க முயன்றார்.
சேலம் மேச்சேரி காரவள்ளி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி. இவரது மனைவி ஜெயம்மா. இவர் தனது மகன்கள் ரமேஷ், கிருஷ்ணன் ஆகியோருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை காலை வந்தார்.
ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே வந்ததும், ஜெயம்மா தான் பையில் வைத்திருந்த மண்ணெண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றிக் கொள்ள முயற்சித்தார். உடனே பாதுகாப்புப் பணியில் இருந்த போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். இது தொடர்பாக ஜெயம்மா கூறுகையில், எனது மகள் பவித்ராவை மேச்சேரி பகுதியைச் சேர்ந்த அருள்முருகனுக்கு இரண்டாவதாக திருமணம் செய்து வைத்தோம். மகளுக்கு 8 மாதத்தில் குழந்தை உள்ளது. இதனிடையே எனது மகள் கடந்த மார்ச் 25-ஆம் தேதி திடீரென மர்மமான முறையில் உயிரிழந்தார். அவரது சாவில் மர்மம் இருப்பதால் முழுமையான விசாரணை நடத்த வேண்டும் என்றார்.