ஆட்டையாம்பட்டியில் உள்ள எட்டுப்பட்டி ஸ்ரீ பெரியமாரியம்மன் கோயில் பொங்கல் பண்டிகையையொட்டி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
ஆட்டையாம்பட்டியில் உள்ள எட்டுப்பட்டி ஸ்ரீ பெரியமாரியம்மன் கோயில் பொங்கல் பண்டிகை ஆகஸ்ட் 3-ஆம் தேதி கம்பம் நடுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதனையடுத்து தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், பூஜைகள் நடைபெற்று வருகின்றன. ஆடி மாதம் 3-ஆவது வெள்ளிக்கிழமையையொட்டி, கேரட், முட்டைக்கோஸ், தக்காளி உள்ளிட்ட 42 வகையான காய்கறிகளால் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டுச் சென்றனர். கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஆகஸ்ட் 15-ஆம் தேதி புதன்கிழமை பொங்கல் பண்டிகையையொட்டி தேர்த்திருவிழா நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாட்டினை விழாக் குழுவினர் செய்து வருகின்றனர்.