சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே உள்ள கொள்ளுகரட்டில் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் தலையில் காயத்துடன் உயிரிழந்து கிடந்தார்.
ஆட்டையாம்பட்டி, கடத்தூர் அருகே உள்ள கொள்ளுகரட்டில் 45 வயது உடைய ஆண் சடலம் கிடப்பதாக பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் சேலம் ரூரல் டி.எஸ்.பி. சங்கரநாராயணன், ஆட்டையாம்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் நடராஜன் மற்றும் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தி சடலத்தைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், தலையில் காயங்களுடன் சடலமாகக் கிடந்தவர் வீரபாண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றி வந்த சம்பத் (45) என்பது தெரியவந்துள்ளது. இவருக்கு வள்ளி என்ற மனைவியும், பிரபா, கமலி என்ற இருமகள்களும் உள்ளனர். கணவன், மனைவி இருவரும் பல வருடங்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளது தெரியவந்துள்ளது. போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்து கிடந்த சம்பத் அப்பகுதி மாணவியிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது. அதில் அம்மாணவியின் தரப்பில் யாராவது கொலை செய்தனரா என்பது குறித்து தனிப்படை அமைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதில் 10க்கும் மேற்பட்ட நபர்களை பிடித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.