ஓமலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து சட்டவிரோத செயல்கள் மற்றும் வழிப்பறி செய்து வந்த 20 ரௌடிகளை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ஓமலூர் உட்கோட்ட காவல் சரகத்தில், ஆறு சட்டம் ஒழுங்கு காவல் நிலையங்கள் உள்ளன. இந்தக் காவல் நிலையப் பகுதிகளில் லாட்டரிச் சீட்டுகள் விற்பனை செய்தல், சட்ட விரோதமாக மதுபானக் கடைகள் நடத்துதல், வழிப்பறிச் செய்தல், பொதுமக்களை மிரட்டுதல் போன்ற செயல்களில் குறிப்பிட்ட சிலர் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஜோர்ஜி ஜார்ஜுக்கு புகார்கள் சென்றன.
இதனைத் தொடர்ந்து அவர்களை கண்காணித்து கைது செய்ய ஓமலூர் உட்கோட்ட துணைக் கண்காணிப்பாளர் பாஸ்கரனுக்கு உத்தரவிட்டார். இந்தநிலையில் டி.எஸ்.பி. பாஸ்கரன் நேரடி மேற்பார்வையில் சட்டவிரோதமான குற்றங்களில் ஈடுபடுவோரைக் கைது செய்ய போலீஸார் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இதன்படி தாரமங்கலம், ஓமலூர், தீவட்டிப்பட்டி ஆகிய பகுதியில் தொடர்ந்து பொதுமக்களை அச்சுறுத்தி வழிப்பறியில் ஈடுபட்டு வந்த பெரியகாடம்பட்டி, கார்த்திக், ஆரூர்பட்டி திருமலை, சிக்கம்பட்டி ஈஸ்வரன், கருப்பனம்பட்டி வெற்றிவேல், ஹரிஸ், அம்மாசி, விஜய், மணிகண்டன், கணேசன், கண்ணன், பழனிசாமி, சக்திவேல், உள்பட 20 பேரை ஓமலூர் உட்கோட்டபோலீஸார் கைது செய்துள்ளனர். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளைக் கண்டறிந்து கைது செய்யும் நடவடிக்கையில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், கைது செய்யப்பட்ட 20 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஓமலூர் கிளை சிறையில் அடைத்தனர். தொடர்ந்து பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் ரௌடிகள், சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுவோரைக் கண்காணித்து கைது செய்யும் நடவடிக்கைகள் தொடரும் என்று ஓமலூர் டி.எஸ்.பி. பாஸ்கரன் தெரிவித்தார்.