சேலத்தில் வர்த்தக மையம் அமைக்கப்படுமா? அதிமுக எம்எல்ஏ ஏ.பி.சக்திவேல் கேள்வி
சேலத்தில் வர்த்தக மையம் அமைய நடவடிக்கை எடுக்கப்படுமா என சேலம் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் கேள்வி எழுப்பினார்.
சேலம் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல், சட்டப்பேரவை விவாதத்தில் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பேசியது:
சேலம் மாநகரம் ஜவுளி, சாயப்பட்டறை, உலோக வேலை உள்ளிட்ட அனைத்து வேலைகளும் சார்ந்த தொழில் நகரமாக இயங்கி வருகிறது. இங்கு ரயில் வசதி, விரைவிலேயே விமானப் போக்குவரத்து வசதி வர இருப்பதால் வர்த்தக மையம் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்கப்படுமா என்றார்.
இதற்கு தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் பதிலளித்து பேசுகையில், கோவையில் கொடிசியா, மதுரையில் மடிட்சியா, திருச்சியில் தன்ஸ்டியா போன்ற வர்த்தக அமைப்புகள் வந்திருக்கின்றன. சேலம் மாநகருக்கு உள்பட்ட தொழில் முனைவோர் அனைவரும் இணைந்து வர்த்தக மையம் அமைக்கும் திட்டத்துக்கு செயற்குறிப்புகள் மற்றும் தேவையான நிதி ஆதாரங்களுடன் முன் வந்தால் டிட்கோ மூலமாக இணைந்து சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து அரசு செய்து கொடுக்கும் என்றார்.