கெங்கவல்லியில் லாட்டரி சீட்டுகளை விற்றதாக ஒருவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
கெங்கவல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகள் விற்பனை தடை செய்யப்பட்டு பல ஆண்டுகளாகின்றன. ஆனாலும், இன்னமும் கெங்கவல்லி பகுதியில் வெளிமாநில லாட்டரி சீட்டுகள், மறைமுகமாக விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சீட்டுகள் ரூ.50, ரூ. 100 விலையில் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த லாட்டரி சீட்டுகளை கூலித் தொழிலாளர்களும், தினசரி வேலைக்கு சென்ற பணம் பெறுபவர்களும் அதிகளவில் வாங்கிவந்தது தெரியவந்தது. இதுகுறித்து கெங்கவல்லி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதனைத்தொடர்ந்து ,செவ்வாய்க்கிழமை இரவு, போலீஸார் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர். அப்போது
கெங்கவல்லி பகுதியைச் சேர்ந்த பாலன்(40) என்பவர் , லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்து வருவது தெரியவந்தது. அவரை கைது செய்து 370 லாட்டரி சீட்டுக்களைப் பறிமுதல் செய்தனர்.
லாட்டரி சீட்டுகள் விற்பவர்களை கெங்கவல்லி போலீஸார் கண்டறிந்து கைது செய்யவேண்டும், லாட்டரி சீட்டு விற்பனையை போலீஸார் கண்காணிக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் கருத்தாக உள்ளது.