சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் நடவடிக்கையைக் கண்டித்து இரும்பாலை பாதுகாப்புக் கூட்டமைப்பினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
பொதுத்துறை நிறுவனமான சேலம் இரும்பாலையை தனியார் மயமாக்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டன.
இந்த நிலையில், சேலம் இரும்பாலை பாதுகாப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார் தலைமையில் இரும்பாலை 2-ஆவது நுழைவுவாயில் முன் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் இரும்பாலை தனியார்மய நடவடிக்கையை உடனே கைவிட வேண்டும். உற்பத்திக்கு தேவையான மூலப் பொருள்களைத் தடையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் மத்திய, மாநில அரசுக்கு எதிராக
முழக்கமிட்டனர்.
இதில் ஐ.என்.டி.யு.சி. மாவட்டத் தலைவர் வடமலை, மாவட்ட பொதுச் செயலாளர் தேவராஜ், சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், எஸ்.சி., எஸ்.டி., நலச்சங்க நிர்வாகி மாணிக்கம், இரும்பாலைக்கு நிலம் கொடுத்தோர் சங்க நிர்வாகி நாகராஜன் மற்றும் இரும்பாலை பாதுகாப்புக் கூட்டமைப்பினர் பங்கேற்றனர்.