சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட பழைய எடப்பாடி சாலை நல்லப்பநாயக்கன் தெருவில் உயர் மின்அழுத்த கோபுரத்தில் பழுதான இரண்டு மின் விளக்குகளை சரி செய்ய பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்தனர்.
சங்ககிரி பேரூராட்சிக்குள்பட்ட பழைய எடப்பாடி சாலை நல்லப்பநாயக்கன் தெரு பகுதியில் உயர் மின்அழுத்த கோபுரத்தில் உள்ள மின் விளக்குகளால் நல்லப்பநாயக்கன் தெரு, பழைய எடப்பாடி சாலை, ஈஸ்வரன் கோயில் செல்லும் சாலை ஆகிய பகுதிகளுக்கு வெளிச்சம் தந்து கொண்டிருந்ததால் பொதுமக்கள் அச்சமின்றி அப்பகுதிகளுக்குச் சென்று வந்தனர். இந்த நிலையில், இரு மின் விளக்குகள் கடந்த சில மாதங்களாகப் பழுதடைந்ததால் பெண்கள் இரவு நேரங்களில் அப்பகுதியைக் கடந்து செல்ல பயப்படுகின்றனர். பழுதடைந்த மின்விளக்குகளை மாற்றித்தர பொதுமக்கள் மனு அளித்தும் சரி செய்யவில்லை என பொதுமக்கள் தரப்பில் தெரிவிக்கின்றனர்.
எனவே, பழுதடைந்த இரு மின் விளக்குகளை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்துக்கு வேண்டுகோள் விடுத்தனர்.