நாகியம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் ஏற்பட்ட தகராறு குறித்து ஆட்சியர் உத்தரவுப்படி, கிராம நிர்வாக அலுவலர் வெள்ளிக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.
நாகியம்பட்டியிலுள்ள இலங்கை அகதிகள் முகாமில் கடலூரிலுள்ள அகதிகள் முகாமைச் சேர்ந்த இருவர் புதியதாக வந்து தங்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் நாகியம்பட்டி அகதிகள் முகாம் தலைவர் சிமியோன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். புதியதாக தங்கிய இருவரையும் உடனே புறப்பட சிமியோன் வலியுறுத்தியுள்ளதாக
கூறப்படுகிறது.
இதன்காரணமாக அதே முகாமில் வசிக்கும் ஜெரின்சு பாஸ்கரனுக்கும் , சிமியோனுக்கும் வாய்த் தகராறு முற்றி கை கலப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து சிமியோன், தம்மம்பட்டி காவல்நிலையத்தில் புகார் செய்தார். காவல்நிலையத்தில், விசாரணைக்கு பின்னர், இருவரும் சமரசமாக செல்வதாக போலீஸில் எழுதிக் கொடுத்தனர். அதன்பிறகு ஜெரின்சுபாஸ்கரன், தன்னை போலீஸார் தாக்கியதாகவும்,அதனால் தனக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறி, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த சேலம் ஆட்சியர் ரோகிணி, ஆத்தூர் கோட்டாட்சியருக்கு விசாரணை செய்து அறிக்கை அனுப்ப உத்தரவிட்டார். கோட்டாட்சியர் உத்தரவின்படி நாகியம்பட்டி கிராம நிர்வாக அலுவலர் (பொ) துரை, வெள்ளிக்கிழமை , நாகியம்பட்டி முகாமில் நேரில் விசாரணை செய்தார்.
விசாரணையில் போலீஸார், யாரையும் தாக்கவில்லை எனவும், தகராறு செய்தவர்களை அழைத்து மட்டுமே சென்றதாகவும் தெரிந்தது. இதுகுறித்து விசாரணை அலுவலர் துரை, ஆத்தூர் கோட்டாட்சியர் செல்வனிடம் விசாரணை அறிக்கையை சமர்ப்பித்தார்.