ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக முதல்வர் பதவி விலகத் தேவையில்லை என பாஜக மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
பாஜக மகளிர் அணியின் மாநில செயற்குழுக் கூட்டம் சேலத்தில் சனிக்கிழமை (அக்.13) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநில தலைவர் தமிழிசை செளந்தரராஜன் கலந்து கொண்டார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
தமிழகத்துக்கு தேவையான திட்டங்களை வழங்குவதற்கு பா.ஜ.க. முனைப்புக் காட்டி வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் போன்றோர் தமிழகத்துக்கு பா.ஜ.க. என்ன செய்தது என்று கேள்வி எழுப்புகின்றனர்.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியில் தமிழகத்துக்கு என்ன செய்தார்கள்? தமிழகத்தில் நெல்லை, மதுரை, தஞ்சை மருத்துவமனைகளில் ரூ.150 கோடியில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டில் ரூ.600 கோடி மதிப்பில் தடுப்பூசி தயாரிப்பு தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது.
எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்காக திட்ட மதிப்பீடு தயாரிப்பதற்கான குழு அமைக்கப்பட்டுள்ளது. பெண்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு குறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தமிழக முதல்வர் மீதான ஊழல் குற்றச்சாட்டுக்கு அவர்கள் மேல்முறையீடு செய்வதாக பதிலளித்துள்ளனர். ஆனால், குற்றச்சாட்டுக்காக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று கூறுவது தவறு. குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவர் பதவி விலக வேண்டும் என்பது பா.ஜ.க.வின் நிலைப்பாடாகும். அதேவேளையில் 2 ஜி குற்றச்சாட்டின்போது ஏன் திமுக பதவி விலகவில்லை?
சபரிமலைக்கு பெண்கள் செல்ல மாட்டோம் என்று கூறி வருகின்றனர். ஆனால், பெண்கள் சென்றால் கூட்டம் அதிகரிக்குமே என்று நடிகர் கமல் கருத்துக் கூறியுள்ளார். அவர் சினிமா தியேட்டரில் கூட்டம் வருவதுபோல் நினைத்துச் சொல்கிறார் என்றார்.