ஏற்காட்டில் 67 மலைக் கிராமங்களில் உள்ள பழங்குடியின, தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த 127 நிறைமாத கர்ப்பிணிகளுக்கு வளைகாப்பு நடத்தப்பட்டது.
தமிழக அரசின் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தில், "வீட்டுக்கு வீடு திருவிழா- ஊட்டச்சத்து பெருவிழா' என்ற செய்தியை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில் ஏற்காடு சமுதாய நலக்கூடத்தில் வளைகாப்பு விழாவும், ஊட்டச்சத்து மாத விழாவும் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
நிகழ்ச்சிக்கு மாவட்ட திட்ட அலுவலர் தோவிகுமாரி தலைமை வகித்தார். ஏற்காடு குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அருள்மொழி, மேற்பார்வையாளர் ரோஸ்லின் சந்திரா ஆகியோர் முன்னிலை வகித்தார்.
விழாவில் பங்கேற்ற கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து கல்வி, கர்ப்பிணிகள் செய்ய வேண்டிவை- செய்யக் கூடாதவை , கர்ப்பிணிகளுக்கு உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்த நலக்கல்வி அளிக்கப்பட்டது. இதையடுத்து, 127 கர்ப்பிணிகளுக்கும் தாய்க்கு சிறப்பு, சேய்க்கு பூரிப்பு என்ற புத்ததங்கள், அரசின் சார்பில் சீர்வரிசைகள் வழங்கப்பட்டன.
காடையாம்பட்டியில்.... ஓமலூர், காடையாம்பட்டி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா பூசாரிப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், 101 கர்ப்பிணிகள் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் எம்எல்ஏ வெற்றிவேல், முன்னாள் எம்எல்ஏ பல்பாக்கி கிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் சாதுபக்தசிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கெங்கவல்லியில்.... கெங்கவல்லி வட்டார ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் உலிபுரம்,செந்தாரப்பட்டி,ஆணையாம்பட்டி,கூடமலை ஆகிய 4 இடங்களில் தலா 40 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
ஆணையாம்பட்டியில் சமுதாய நலக்கூடத்தில் நடந்த வளைகாப்புக்கு, குழந்தை வளர்ச்சித்திட்ட அலுவலர் ஷாலினி தலைமை வகித்தார். கெங்கவல்லி எம்எல்ஏ மருதமுத்து, வட்டார மேற்பார்வையாளர்கள் மாதேஸ்வரி,தமயந்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
உலிபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை சம்பூர்ணம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.செந்தாரப்பட்டி, கூடமலை ஆகிய ஊர்களிலும் தலா 40 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.