கபினியிலிருந்து வியாழக்கிழமை திறக்கப்பட்ட உபரிநீர் சனிக்கிழமை மேட்டூர் அணையை வந்தடைந்தது.
கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர் பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாடு பகுதியிலும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் கபினி அணை நிரம்பிய நிலையில் அணைக்கு வரும் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி வியாழக்கிழமை நொடிக்கு 25 ஆயிரம் கனஅடி வீதம் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டது. காவிரியில் திறக்கப்பட்ட உபரிநீர் சனிக்கிழமை மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. பகல் 3 மணியளவில் மேட்டூர் நீர் தேக்கத்தில் உள்ள அடிப்பாலாறு பகுதிக்கு வந்து சேர்ந்த உபரிநீர் இரவில் மேட்டூர் அணைக்கு வந்தது. தொடக்கத்தில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் வந்த நீர் வரத்து பின்னர் படிப்படியாக அதிகரித்துள்ளது.
காவிரியில் நீர் வரத்து அதிகரித்ததால் காவிரி கரையில் மேய்ந்து வரும் கால்நடைகள் பகல் 3மணியளவில் மேடான பகுதிக்கு வந்து சேர்ந்தன. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ள காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. நடப்பு ஆண்டில் மேட்டூர் அணை நிரம்ப வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளதாக மேட்டூர் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சனிக்கிழமை காலை மேட்டூர் அணையின் நீர் மட்டம் 57.11 அடியாக இருந்தது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக நொடிக்கு 500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இது பகல் 11.30 மணிக்கு நொடிக்கு 1,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு நொடிக்கு 1,414 கனஅடி வீதம் வந்து கொண்டிருந்த நீர்வரத்து பின்னர் படிப்படியாக அதிகரித்து வந்தது. இரவில் துவக்கத்தில் நொடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதம் வந்துகொண்டிருந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து வருகிறது. அணையின் நீர் இருப்பு 22.58 டி.எம்.சியாக இருந்தது.