குமாரபாளையம் எஸ்எஸ்எம் கலை அறிவியல் கல்லூரியில் புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரித் தலைவர் எம்.எஸ். மதிவாணன் தலைமை வகித்தார். கல்லூரி இயக்குநர் கே.ராமசாமி முன்னிலை வகித்தார். கல்லூரியில் புதிதாக சேர்ந்த முதலாம் ஆண்டு மாணவ, மாணவியரை முதல்வர் கே. காமராஜ் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து, கல்லூரியில் அளிக்கப்படும் கல்வி, ஒழுக்கம், விதிமுறைகள் குறித்து வணிகவியல் துறைத் தலைவர் எல். பெரியசாமி எடுத்துரைத்தார்.
சிறப்பு விருந்தினர்களாக ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள கேமரூன் நாட்டை சேர்ந்த இன்டர்நேசனல் ஏஸ்ட்ராமிக்ஸ் அகாதெமியின் மண்டலச் செயலர்கள் டோமுகும் சியா, நங் லம்பத் தோ ஆகியோர் பங்கேற்றுப் பேசுகையில், இக்கல்லூரியில் பயிலும் மாணவர்கள் மூவருக்கு வெளிநாட்டில் மேல்படிப்பு பயில முழு உதவித்தொகையும் வழங்குவதாகத் தெரிவித்தனர்.
விழாவில், தமிழ் பங்களிப்புக்காக சொல்லேழுலவர்' எனும் விருது பெற்ற தமிழ்த்துறை உதவி பேராசிரியர் நா. சங்கரராமனுக்கு பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. சேர்க்கை அலுவலர் தர்மலிங்கம், மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் விழாவில் கலந்து கொண்டனர்.