வரும் நவம்பர் 27 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தப்படும் என ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டாக அறிவித்துள்ளனர்.
புதிய ஓய்வூதியத் திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். 21 மாதகால நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்.
மேலும் 5 ஆயிரம் அரசுப் பள்ளிகளை மூடுவது உடனடியாக கைவிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ - ஜியோ பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், காலவரையற்ற வேலைநிறுத்த ஆயத்த மாநாடு சேலத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
முன்னதாக ஜாக்டோ - ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்களான சுப்பிரமணியன், மீனாட்சிசுந்தரம், மாயவன், தாஸ், தாமோதரன், வெங்கடேசன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் கூறியது:
எங்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் நவம்பர் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
இதில் தங்களது கோரிக்கைகளை முதல்வர் புரிந்து கொள்ளாமல் உள்ளார்.ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அந்தஸ்து அதிகாரிகள் மற்றும் நீதிபதிகள் ஆகியோருக்கு 21 மாத நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளது. ஆனால், அதே நேரத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த நிலுவைத் தொகை வழங்கப்படாமல் உள்ளது.
தங்களது போராட்டத்துக்காக வரும் நவம்பர் 19-ஆம் தேதி முதல் நவம்பர் 23-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை சந்தித்து பிரசாரம் செய்வோம்.
இந்தப் போராட்டத்தில் 7.50 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கலந்து கொள்வர். போராட்டத்தால் அரசுக்கும், மக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் சூழல் உருவாகும்.
எனவே, அரசு தங்களை அழைத்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும்.அரசு தங்களை அழைத்து பேசினால், நிதி வருவாய்க்கான மூலத்தை சொல்வதற்குத் தயாராக உள்ளோம்.
எங்களது கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், நாடாளுமன்ற தேர்தலின்போது அரசுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்வோம் என்றனர்.