சத்துணவுக் கூடத்துக்குப் புதிய கட்டடம் கட்ட பூமி பூஜை நடைபெற்றது.
எடப்பாடி நகரில் உள்ள சின்ன ஏரிப் பிரிவுயில் இயங்கிவந்த தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு, தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியால் திறந்துவைக்கப்பட்டது. இந்தப் பள்ளியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்த நிலையில், பள்ளிக்குத் தனி சத்துணவுக் கூடம் அமைத்துதர வேண்டும் என்ற கோரிக்கையையடுத்து, சேலம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பன்னீர்செல்வம் தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.5.5 லட்சம் நிதியை ஒதுக்கீடு செய்தார். இதன்பேரில், புதிய சத்துணவுக் கூடம் கட்ட பூமி பூஜை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழச்சியில் நகர்மன்ற முன்னாள் தலைவர் டி.கதிரேசன், முன்னாள் துணைத் தலைவர் ராமன், அறங்காவலர் நாராயணன், பொதுப்பணித் துறை உதவி செயற்பொறியாளர் முருகேசன், தங்கவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.