வாழப்பாடி அருகே ஏத்தாப்பூர் சமயபுரம் மாரியம்மன் கோயில் சித்திரை தேரோட்டம் நடைபெற்றது. இதில், சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
ஏத்தாப்பூர் வசிஷ்ட நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீ சமயபுரம் மாரியம்மன் கோயிலில், எட்டாம் ஆண்டு சித்திரைத் தேர்த் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், மூலவருக்கு தங்கக் கவசம் சாத்துதல் மற்றும் உற்சவமூர்த்தி ஊர்வலமும் நடைபெற்றன. மூலவர் தங்கக் கவச அங்கியிலும், உற்சவ மூர்த்தி புஷ்ப
அலங்காரத்திலும் பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.
சிறப்பு பூஜை வழிபாட்டுக்கு பின் தேரோட்டம் நடைபெற்றது. ஏத்தாப்பூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மன் தரிசனம் செய்தனர்.
தேரோட்ட விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு விழாக் குழு சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.